Tuesday, November 2, 2010

எப்போதும் இறுகும் உங்கள் பிடி


அந்தி மங்க
தங்கள் கூடு நோக்கி
திரும்பிக் கொண்டிருக்கின்றது
கருநாரைக் கூட்டம்

வாஞ்சையோடு
ஓடிவரும்
அக்குழந்தையை
வாரி அணைக்கிறீர்கள்

பிரியத்தால்
பின் மெல்ல
இறுகுகின்றது உங்கள் பிடி

சூழும் இருளில்
இறுதி மூச்சை நிறுத்திக் கொண்டு
அல்லித் தண்டென
மெல்லச் சரிகிறது அது

வாளின் கூர்மையொத்த
நிலைத்த
அதன் விழிகளை
பார்க்க முடியாமல்
முகம் திருப்பிக் கொள்ளும்
உங்களுக்கு
அப்போது முளைத்திருக்கின்றன
கடைவாயில் இருபற்கள்
வெளித் துருத்திக் கொண்டு

இனி
கண்ணாடியில்
முகம் பார்க்கையில்
நீங்கள் மட்டுமாவது
பயப்படாதிருக்க
முயற்சி செய்யுங்கள்
அதுபோதும்.

No comments:

Post a Comment